மக்களின் எதிர்பார்ப்புகளுடன் விளையாடும் உரிமை எமக்கு கிடையாது!
பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களுடன் விளையாடும் உரிமை எமக்கு கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
கட்டுபெத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் இந்த இரண்டாண்டு ஆட்சிக் காலம் தொடர்பில் சுய விமர்சன மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் காலமிது என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் பிழைகள் என்ன என்பது குறித்து கண்டறிந்து அவற்றை திருத்திக் கொண்டு எதிர்வரும் மூன்றாண்டு காலத்தில் மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது கடினமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும், மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நாம் செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவொரு தேவைக்காகவும் தீர்மானங்களை எடுக்க தயங்காத அரசாங்கமொன்றையே மக்கள் அந்தக் காலத்தில் எதிர்பார்த்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தொற்று காரணமாக சில விடயங்கள் கவனிக்க முடியாமல் போயுள்ளது, விசேடமாக கவனம் செலுத்தப்பட வேண்டிய சில விடயங்கள் கவனிக்கப்படவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.