மகனால் நடிகர் ஷாருக்கானின் விளம்பங்களை நிறுத்திய நிறுவனம்!
போதைப் பொருள் வழக்கில் ஆர்யன்கான் சிக்கிய நிலையில், அவரது தந்தைக்கு வரவேண்டிய விளம்பர வாய்ப்புகள் பறிபோயுள்ளன.
ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார். இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது. எக்கனாமிக்ஸ் டைம்ஸின் அறிக்கையின்படி, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அந்நிறுவனம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டதையடுத்து விளம்பரங்களை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.
ஷாருக்கானின் மிகப்பெரிய ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் பைஜூவும் ஒன்று என்றாலும், ஹூண்டாய், எல்ஜி, துபாய் சுற்றுலா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பல நிறுவனங்களுக்கும் மெகாஸ்டார் முகமாக இருக்கிறார் ஷாருக்.
கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாரூக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்துவருகிறார். இதனால் ஆண்டுதோறும் ஷாருக்கானுக்கு பைஜூஸ் 3 முதல் 4 கோடி ரூபாய் பணம் செலுத்திவருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஷாருக்கானின் மகன் ஏற்படுத்திய சர்ச்சையால், அவருடன் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் விரும்பவில்லை என்பதால், அவருடனான விளம்பரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், விளம்பர தூதுவராக அவர் தொடர்கிறாரா? அல்லது அந்நிறுவனம் அவரை முழுமையாக கைவிட்டுவிட்டதா என்பது குறித்து தெரியவில்லை.