முடங்கியது சமூக வலைத்தளங்கள்!

நேற்றிரவு முதல் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் செயலிகள் 6 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கின.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களை உலகெங்கும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்றிரவு இவற்றின் சேவைகள் திடீரென முடங்கின. இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் இருந்து உலகம் முழுவதும் இச்சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்திருந்த பேஸ்புக் நிறுவனம், இந்த தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என கூறியிருந்தது.

இந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பிறகு காலை சுமார் 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. இது குறித்த ட்விட்டர் பதிவில், உலகெங்கும் உள்ள பயனாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து முழு அளவில் சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கின்றன. அதேநேரத்தில், எதன் காரணமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *