நாளை ஊரடங்கு நீக்கப்பட்டாலும் பயணக் கட்டுப்பாடு தொடரும்!

நாளைய தினம் (01) தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும், மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடு மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென, கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நாளை, ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு நீக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கமைய, ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் பேணப்பட வேண்டிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவாக அறிவிக்கப்படுமென, ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் அரச சேவைகளை வழமைக்கு கொண்டு வரும் வகையில், நாளை (01) முதல் அரசாங்க சேவைகளை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

அத்துடன், நாளை ஊரடங்கு நீக்கப்பட்டாலும், எதிர்வரும் 2 வாரங்களுக்கு புகையிரத சேவைகளை முன்னெடுக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பயணிகள் பஸ்கள் மாகாணங்களுக்குள் மாத்திரம் இயங்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *