சிங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகை 4.1 சதவீதம் குறைந்தது!
‛சிங்கப்பூர் மக்கள் தொகை கடந்த ஆண்டு ஜூன் நிலவரப்படி 4.1 சதவீதம் குறைந்துள்ளது’ என அந்நாடு வெளிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா காரணமாக பொருளாதாரம் மந்தமாகவே நீடிக்கிறது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்விலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வருடாந்த மக்கள்தொகை அறிக்கையை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிங்கப்பூரின் மக்கள்தொகை 1970ம் ஆண்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த ஜூன் மாத நிலவரப்படி நாட்டின் மொத்த மக்கள்தொகை கடந்த ஆண்டை விட 4.1 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், சிங்கப்பூரில் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை 6.2 சதவீதம் குறைந்துள்ளது.
மற்ற நாடுகளைப் போல சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைந்தும், வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் வருகிறது. சிங்கப்பூரின் தற்போதைய மக்கள்தொகை 59 லட்சம் ஆகும். மக்கள் தொகை சரிவைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்க குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.