இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மீண்டும் குறைந்த சராசரி மனித ஆயுட்காலம்!
மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் மற்றும் பிறப்பு விகிதம் கொரோனா தாக்கத்தை அடுத்து கணிசமாகக் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வு மூலமாக நிரூபித்துள்ளனர்.
கொரோனாவால் ஸ்தம்பித்து போயிருந்த உலக நாடுகள், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனால் பல நாடுகள் கொரோனாவின் நான்காவது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
தற்போது கொரோனா தொற்றின் வீரியம் படிப்படியாக குறைய துவங்கியுள்ளதால் ஆசிய நாடுகள் பலவற்றில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று 29 நாடுகளில் கடந்த 2020ம் ஆண்டு பிறப்பு இறப்பு விகிதம் குறித்த ஓர் ஆய்வு மேற்கொண்டது.
அதில், கொரோனா தாக்கத்தை அடுத்து இந்த நாடுகளில் குழந்தைகள் பிறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020ம் ஆண்டு பிறந்த குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் குறைவாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு முலம் கூறப்படுகிறது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இங்கிலாந்து, வேல்ஸ், இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் சராசரி ஆயுட்காலம் கணிசமாக குறைந்துள்ளது. நடுத்தர வயது கொண்ட குடிமக்கள் அதிகமாக 2020ஆம் ஆண்டு பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் 60 வயதை எட்டிய பலர் பலியாகியுள்ளனர். மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் கொரோனா தாக்கத்தினையடுத்து கணிசமாகக் குறைந்து வருவது குறித்த ஆய்வுகளால் நிரூபணமாகியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தை அடுத்தும் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.