உணவுப் பொருட்கள் பழுதடையும் வாய்ப்பு இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
டொலர் பற்றாக்குறை காரணமாக துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களைத் தாமதமின்றி விடுவிக்கத் தேவை யான டொலர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வர்த்தக அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகள் மாற்றப்பட்டுள்ளதால் இறக்குமதியாளர்களின் வங்கி மற்றும் தேவையான டொலர் பற்றிய தகவல்கள் குறித்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் இது குறித்து மத்திய வங்கி முடிவெடுக்கும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறித்த கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பாக சாதகமான பதில் இன்று அல்லது நாளை தினம் அறிவிக்கப்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை மிக விரைவாக வெளியேற்றத் தவறும் பட்சத்தில் பழுதடைந்து விட வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் சுங்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்துக்கும், இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகத்துக்கும் பணிப்புரை வழங்கியிருந்தார்.
பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் செயல்முறை சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்று அந்தச் சங்கம் மேலும் தெரிவித் துள்ளது.
கொள்கலன்களை வெளியேற்ற சுமார் 15 மில்லியன் டொலர் தேவை என்று அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.