கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றி!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்களை எடுத்தது. சென்னை அணி 172 ரன்களை விரட்டியது.

ருதுராஜ் – டூப்ளசிஸ் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் சேர்த்தனர். ருதுராஜ் 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் மொயின் அலி களத்திற்கு வந்தார்.

12-வது ஓவரில் சென்னை 102 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளசிஸ் வெளியேறினார். அவர் 30 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து வெளியேறினார்.

தொடர்ந்து ராயுடு, மொயின் அலி, ரெய்னா, தோனி என விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி வீழ்த்திய 18-வது ஓவர் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது பந்து வீச வந்தார் வருண். முதல் பந்தில் ரெய்னா ரன் அவுட். மூன்றாவது பந்தில் தோனி போல்டானார். அதோடு அந்த ஓவரில் வரும் ஐந்து ரன்களை தான் அவர் கொடுத்திருந்தார்.

ஆனால் பிரசித் கிருஷ்ணா அதற்கடுத்ததாக வீசிய 19-வது ஓவரில் சென்னை 22 ரன்களை எடுத்தது. ஜடேஜா இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசி இருந்தார். 

கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. அந்த ஓவரை சுனில் நரைன் வீசினார். இவர் சூப்பர் ஓவரில் மெய்டன் வீசியவர். அதே போலவே முதல் பந்தில் சாம் கரனை அவுட் செய்தார். அடுத்த பந்து டாட். ஸ்ட்ரைக்கில் தாக்கூர். மூன்றாவது பந்தில் மூன்று ரன்கள். கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் தேவைப்பட ஜடேஜா ஸ்ட்ரைக்கில் இருந்தார். நான்காவது பந்து டாட். ஐந்தாவது பந்தில் ஜடேஜா அவுட். LBW முறையில் அவர் வெளியேறினார். தீபக் சஹார் களமிறங்கினார். வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுத்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை இரண்டாவது பாதி ஆட்டத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு அமீரகத்தில் சென்னை தொடர்ச்சியாக பெற்றுள்ள ஆறாவது வெற்றி இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *