மலேசியாவில் இலங்கை பெண் மரணத்தில் சந்தேகம்!
பேருவளை – கல்ஹேன பகுதியைச் சேர்ந்த 32 வயதான பெண்ணொருவர் வீட்டுப் பணிப்பெண்ணாக மலேசியா சென்றிருந்த நிலையில்,அங்கு அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்திருந்தனர்.
சம்பவம் தொடர்பில், வெளிவிகார அமைச்சு மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து அது குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இலங்கை தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை பெண் உயிரிழந்தமை தொடர்பில், அந்த நாட்டு காவல்துறை பிரதானிக்கும், உயர்ஸ்தானிகர் காரியாலய அதிகாரிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.