மனைவிக்கு இருந்த இரகசிய தொடர்பே கணவனை கொலை செய்ய தூண்டியுள்ளது!
கொலை செய்யப்பட்டவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அரியாலை பூம்புகாரைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார், மனைவியுடன் அவருக்கு இருந்த இரகசியத் தொடர்பால் எழுந்த சிக்கல் குடும்பத்தலைவரை கொலை செய்யும் முடிவுக்கு கொண்டு சென்றுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இருவரும் இணைந்தே குடும்பத்தலைவரை கொலை செய்துள்ளனர் என்றும் தொடக்க விசாரணைகளின் அடிப்படையில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்தவரும் பூம்புகாரில் வசித்து வருபவருமான துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் நேற்றிரவு திருகுபலகை கட்டையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார். சடலத்தை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லுநர் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கொல்லப்பட்டவரின் மனைவியான 28 வயதுடைய பெண் மற்றும் அவருடன் தொடர்பை வைத்திருந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும் யாழ்ப்பாணம் குற்றப் பிரிவு காவல்துறையின் தடுப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது