சண்டியர்கள் சிறைக்குள் வந்தால் எலும்பை முறிக்க வேண்டும் பொன்சேகா தெரிவிப்பு!
சண்டியர்கள் சிறைக்குள் வந்தால் அவர்களின் எலும்பை முறிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் ராஜாங்க அமைச்சர் லொஹான் மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
பிரதிப்பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய அனுரத்த ரத்வத்தே எம்முடன் நெருங்கிச் செயற்பட்டவர், அவரின் புதல்வர் என்று லொஹனை சொல்ல முடியாது. இவர் தந்தையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சி அந்த காலத்தில் கோழைகளைப் போன்று ஒளிந்திருந்தவரே இந்த லொஹான். 15 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழீழ விடுதலைப்புலி சந்தேகநபர்களையே இவர் அச்சுறுத்தியுள்ளார். இது எவ்வளவு மிருகத்தனமான செயல்.
இவ்வாறான செயற்பாடுகளை தைரியமானவர்கள் செய்யமாட்டார்கள், இதனை செய்வோர் கோழைகளே. நானும் இந்த சிறையில் இருந்திருக்கின்றேன். இவ்வாறான நபர்கள் சிறைக்குள் வந்து சண்டித்தனம் காட்டினால் அவர்களின் அனைத்து கைதிகளும் இணைந்து அவர்களின் எலும்பை முறிக்குமாறு, நான் கைதிகள் அனைவரிடமும் கோருகின்றேன்.
இந்த நபர் குண்டர்களைக் கொண்டு மாணிக்கக்கல் அகழ்வதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இவர் சிறைச்சாலை விவகார அமைச்சுப் பதவியை மட்டுமே துறந்துள்ளார். இந்த நபர் நாடாளுமன்றிலும் குடி போதையில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.