நடிகர் விஜய்க்கும் எனக்கும் பிரச்சினை இருப்பது உண்மைதான் தந்தை சந்திரசேகர் தெரிவிப்பு!

விஜய்யுடன் ஏற்படும் சண்டை குறித்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் முதல்முறையாக மேடையில் பேசியுள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் எழுதி, இயக்கியுள்ள படம் ‘நான் கடவுள் இல்லை’. விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் இனியா, சாக்ஷி அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (செப். 16) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் சமுத்திரக்கனி, விஜய் ஆண்டனி, இனியா, சாக்ஷி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், “விஜய் ஆண்டனி எனக்காகக் காய்ச்சலையும் பொருட்படுத்தாமல் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கிறார். சமுத்திரக்கனி இப்போது எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதே இல்லை. ஹைதராபாத்தில் தங்கி தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயின்கள் நடிப்பதோடுசரி படத்தின் விளம்பரத்திற்கு வருவதில்லை. கேட்டால் அதுதான் ஸ்டைல் என்கிறார்கள். ஆனால் இனியா, சாக்ஷி அகர்வால் அப்படியில்லை. படப்பிடிப்பு முடித்து, டப்பிங் பேசி, ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கும் வந்திருக்கின்றனர். அதனால் மகிழ்ச்சி.
நான் என் மகனுக்கு விஜய் என பெயர் வைத்தது குறித்து அண்மையில் தெரிவித்திருந்தேன். அதனை ஊடகங்கள் வேறுவிதமாகச் சித்தரித்து வெளியிட்டுவிட்டார்கள்.

எனக்கும், என் மகனுக்கு பிரச்னை இருப்பது உண்மைதான். சொந்த வாழ்கை குறித்துப் பேசக்கூடாது. எந்த வீட்டில்தான் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லை? அதேபோல்தான் நானும், விஜய்யும் சண்டை போட்டுக் கொள்வோம். இன்று சண்டை போட்டால், நாளை ஒன்றாகிவிடுவோம். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *