கருப்பு பூஞ்சை நோய் பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!
கருப்பு பூஞ்சை நோயால் கண்கள் மற்றும் மூளையை சேதமடைவதால், உடனடியாக மருத்துவ உதவி பெறப்படாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை பன்னிரண்டு கொவிட் -19 நோயாளர்களுக்கு ‘கருப்பு பூஞ்சை’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சையியல் ஆலோசகரான வைத்தியர். ப்ரிமாலி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் இரத்தினபுரியில் இருந்து இரண்டு நோயாளிகள், திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து மூன்று நோயாளிகள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து நான்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கராப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலையில் இருந்து தலா ஒருவர் என்ற ரீதியில் செப்டம்பர் மாதத்திற்குள் பதிவாகியுள்ளனர்.
அவர்கள் அனைவரும் நீரிழிவு நோயாளிகள். எனவே, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மூக்கு மற்றும் கண்களைச் சுற்றி பூஞ்சைகள் காணப்படுவதுடன், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படும் போது முகத்தில் வலியும் இருக்கும்.
இந்நோயானது ஒருவருக்கு ஒருவர் பரவாது என்றும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்