1-10 வயது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் கொரோனா!
இந்தியாவில் 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளை கொரோனா பாதிப்பது அதிகரித்து வருவதாக தேசிய கோவிட் அவசர நிலை உத்தி வகுப்புப் பணிக்குழுவின் எம்பவர்டு குரூப் எச்சரித்துள்ளது.
தரவுகளின்படி, 1 முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது மார்ச்சில் மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 7.04% ஆக அதிகரித்துள்ளது. மேலும் துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் 100 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டால் அதில் 7 குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.
ஆனால் இந்த மாற்றம் கண்டு அஞ்சத்தேவையில்லை, சிறிய அளவில்தான் குழந்தைகளைப் பாதிக்கிறது என்று கூறும் நிபுணர்கள் குழு வயதானோர் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு கோவிட் பாதிப்பிலிருந்து மீள மீள அது குழந்தைகளைத் தொற்றுவது லேசாக அதிகரித்து வருகிறது என்று கூறுகின்றனர். நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தரவுகள் விவாதிக்கப்பட்டன.
மார்ச் 2021-க்கு முன்பாக ஜூன் 2020 முதல் பெப்ரவரி 2020 வரையிலான 9 மாதங்களில் 1-10 வயதுடைய குழந்தைகளை கொரோனா தொற்றுவது என்பது மொத்த பாதிப்புகளில் 2.72% லிருந்து 3.59% ஆக மட்டுமே இருந்தது. 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் குழந்தைகள் பாதிப்பு கோவிட் எண்ணிக்கைகளின் படி மிஜோரமில் மொத்த பாதிப்புகளில் 16.48% 10 வயதுக்கும் கீழான குழந்தைகளாவர். டெல்லியில் ஆகக்குறைவாக இது 2.25% ஆக உள்ளது