அன்று 60ஆயிரம் இளைஞர்களைக் கொன்றவர்கள் இப்போது கொவிட் மூலம் மக்களைக் கொல்ல முயற்சி!
சஜித் பிரேமதாச தரப்பினர் 1971 இல் 12,000 பேரைக் கொன்றனர். 88/89 இல், சுமார் 60,000 இளைஞர் களைக் கொன்றனர். இப்போது அவர்கள் கொரோனா தொற்றுநோய் மூலம் மக்களை கொல்ல முயற்சிக் கின்றனர் என நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக நாடு முழுவதும் வீதிகளின் இருபுறமும் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நடும் திட்டம் முன்னெடுக்கப் படுகிறது. இதன்போது செயற்படுத்தப்படும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் மீரிகமவில் இருந்து பொத்துஹெர வரை யிலான இரண்டாம் கட்ட மரம் நடுகை திட்டத்தில் கலந்து கொண்ட போதே இவ்வாறு தெரிவித்த நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் கூறுகையில்,
கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம். தடுப்பூசி திட்டங்களை செயல்படுத்தும் உலகின் முதல் 10 நாடுகளிடையே எமது நாடு முன்னணியில் உள்ளது. அதைப் பற்றி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். தடுப்பூசி போட வேண்டாம் என்று தான் சஜித் பிரேமதாச குழு பிரசாரம் செய்தது, இலங்கையை ஆய்வு கூடமாக்க வேண்டாம் என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பல்வேறு சமூக ஊடகங்களை உருவாக்கி மக்களுக்கு இங்கு வர வேண்டாம் என்று தகவல் அனுப்புவதை தான் அவர்கள் செய்தார்கள். தடுப்பூசி எடுத்தால் இரண்டு ஆண்டுகளில் இறந்து விடுவோம் என்று கூறினார். பக்க விளைவுகள் வரும் என்று சொன்னார். தடுப்பூசி திட்டத்தை தோல்வியடையச் செய்வதையே எதிர்க்கட்சி செய்தது.
சமூக ஊடகக் குழுவொன்றில் உள்ள ஒரு மருத்துவர் தடுப்பூசி பற்றி தவறான பிரசாரத்தை பரப்புவதை நான் பார்த்தேன். அவர்கள் நாடு முழுவதும் செயலில் உள்ள தடுப்பூசி திட்டத்தை முறியடிக்க விரும்புகிறார்கள்.ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தடுப்பூசி வழங்குவதை வெற்றிகரமாக முன்னெடுக்கவே பாடுபடுகிறது. மக்களும் இந்த தடுப்பூசியைப் பெற விரும்புகிறார்கள். கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனம் வழங்கிய வழிகாட்டுதல்களைச் செயல்படுத்த நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
உலகின் பல்வேறு நாடுகளின் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைவாக எமது நாட்டில் கொரோனா தொற்றை ஒழிக்க எதிர்பார்க்கிறோம். மக்களை மரணத்தின் விளிம்புக்கு கொண்டு செல்வதைத் தான் எதிர்க்கட்சிகள் செய்கின்றன. அவர்கள் 1971 இல் 12,000 பேரைக் கொன்றனர். 88/89 இல், சுமார் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அவர்கள் கொரோனா தொற்றுநோய் மூலம் மக்களைக் கொல்ல முயற்சிக்கின்றனர்.
கொரோனா ஊடாக மக்கள் இறப்பதைக் காணவே இவர்கள் விரும்புகிறார்கள். இன்று அத்தகைய எதிக்கட்சி தான் உள்ளது என்றார்