40 ஆண்டுகளாக தூங்காத பெண் பரிசோதித்த மருத்துவர்களுக்கு வந்தது தூக்கம்!
சீனாவில் பெண் ஒருவர் தமது சிறு வயது முதல் ஒருநாள் இரவு கூட தூங்கியதில்லை என வெளிப்படுத்தியது மருத்துவர்களை மிரள வைத்துள்ளது.
சீனாவின் கிழக்கு மாகாணமான ஹெனானைச் சேர்ந்த லி ஜானிங் என்பவருக்கே தூக்கம் இல்லை என்ற இந்த விசித்திர வியாதி கண்டறியப்பட்டுள்ளது. தனக்கு 5 வயதாக இருக்கும்போது ஒருமுறை தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டதாகவும், அதன் பின்னர் இதுவரை ஒருபோதும் தூங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர், இவரின் இந்த கூற்றை சோதிக்க பலர் முயன்று, கடைசியில் அவர்கள் தூங்கிப்போயுள்ளனர். ஆனால் லி ஜானிங் மட்டும் தூக்கமின்றி, புத்துணர்வுடன் காணப்பட்டுள்ளார்.
மட்டுமின்றி, அவரது கணவரும் தமது மனைவி தூங்குவதை தாம் இதுவரை பார்த்ததில்லை என உறுதி செய்துள்ளார்.
ஊரே தூக்கத்தில் இருக்கும் போது லி ஜானிங், வீட்டை சுத்தம் செய்வது உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக இருப்பார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
மனைவியின் இந்த தூங்காத நிலையால் கவலை கொண்ட அவரது கணவர், தூக்க மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் அதனாலும் தூக்கம் இல்லை என்றே தெரிய வந்துள்ளது.
இதனிடையே மருத்துவர்கள் குழு முன்னெடுத்த தீவிர பரிசோதனையில், லி ஜானிங் தூங்குகிறார், ஆனால் அது விசித்திரமான முறையில் என கண்டறிந்தனர். அவர் தனது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அவரது கண் இமைகள் கவிழ்வதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதுவே அவர் தூக்கத்தில் இருப்பதை உணர்த்துவதாகவும், ஆனால் அப்போதும் அவர் பேசிக்கொள்வதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும், ஒரு நாளுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் அவரது கண்கள் மூடவில்லை என்பதையும் மருத்துவர்கள் சோதனையினூடே கண்டறிந்துள்ளனர்.