பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாக செயற்படுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்!

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்களை காண்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்
இன்று நடைபெற்ற நிதி சட்டமூல வாக்கெடுப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ,

இன்று ஒரு கிலோ சீனியை பெற சதோச முன்னால் நூற்றுக்கணக்கான மக்கள் பல மணிநேரம் வரிசையில் நிற்கின்றனர்.நூறு ரூபாவை சேமிக்கவே இவ்வாறு கொரோனா தொற்றையும் கவனிக்காமல் வரிசையில் நிற்கின்றனர்.இதுவே இந்நாட்டு மக்களின் தற்போதைய பொருளாதார நிலை.

ஆனால் மறுபக்கம் போதை பொருள் வியாபாரிகள், பாதாள குழு உறுப்பினர்கள், மோசடி செய்யும் வர்தகர்கள் மறைத்து வைத்திருக்கும் கருப்பு பணங்களை வெள்ளையாக மாற்ற வழிவகுக்க இன்று அரசாங்கம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.

நூறு ரூபாயை சேமிக்க வரிசையில் நிற்கும் அப்பாவி பொதுமக்கள் ஒருபுறம். நூறு கோடி கோடி ரூபாயை பதுக்கிய கொள்ளையர்கள் ஒரு புறம்.இதுதான் இன்று நாட்டில் உள்ள சமூக நீதி.இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் சமூக நீதி மீறப்பட்டுள்ளது.

இருபதாம் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த பின்னர் நடைபெற்ற எந்தவொரு வாக்களிப்பிலும் கலந்துகொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.அவர்களின் தலைவர் எதிராக வாக்களித்துள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இச்சட்டமூலத்தை சமர்ப்பித்தால் அவரை எதிர்க்க முடியாமல் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.ஆகவே இவர்கள் இப்பொழுது பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீமின் கட்டுபாட்டில் இல்லை முழுமையாக பசில் ராஜபக்சவின் கட்டுபாட்டிலயே உள்ளது தெளிவாக புலனாகிறது.

இதனால் இவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்பதை விட பசில் காங்கிரஸ் உறுப்பினர்களாகவே செயற்படுகின்றனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *