கோவிட் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவது ஏன்?

SARS-CoV-2 வைரஸால் ஏற்படும் கோவிட் -19 தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. உலகநாடுகள் மூன்றாம் அலையை எதிர்நோக்கியுள்ள நிலையில், ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வர கோவிட் -19 தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதே சுகாதார நிபுணர்களின் நம்பிக்கை ஆகும். இதனை அடுத்து உலகம் முழுவதும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவது மிகவும் சவாலான பணி என்ற போதும், இந்தியா உட்பட ஏராளமான உலக நாடுகள் இந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரை இதுவரை சுமார் 65 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

இதில் சுமார் 15 கோடி மக்கள் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். எனினும் தடுப்பூசி போட்டு கொள்வதால் ஏற்படும் சில பக்க விளைவுகளை கருத்தில் கொண்டு இன்னும் பலருக்கு அதை போட்டு கொள்வதில் தயக்கம் காணப்படுகிறது. கோவிட் தடுப்பூசி போட்து கொண்ட பிறகு உடலுக்குள் என்ன நடக்கிறது, ஏன் பொதுவான சில பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன போன்ற குழப்பங்களுக்கான விடையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தடுப்பூசி போட்டு கொண்ட பின் நடக்கும் மாற்றங்கள் :

தடுப்பூசி என்பது எதிர்காலத்தில் ஒருவேளை தொற்று ஏற்பட்டால் அதனை எதிர்த்துப் போராட தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை முன்பே பெறும் செயல்முறை. தடுப்பூசிகள் என்பது நோயை ஏற்படுத்தும் வைரஸ், பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணியை ஒத்த ஒரு ஏஜென்ட் ஆகும். ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் தொற்றுக்கு காரணமான வைரஸ் அல்லது பாக்டீரியாக்களை, நமக்கு நோய்களை ஏற்படுத்தாத வகையில் அவற்றை உருவாக்கி தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு அவை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.

வைட்டமின் D உணவுகளை சாப்பிடுவதன் மூலம் கொரோனா பாதிப்பை குறைக்க முடியுமா ?

கோவிட்-19 தொற்றை பொறுத்த வரை SARS-CoV-2 வைரஸ் தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், அதிலிருக்கும் ஏஜென்ட் நமது திசுக்களின் செல்களுக்குள் செல்கிறது. இதன் பிறகு, அது உடலுக்குள் நுழையும் வெளி பொருட்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடும் சில ‘டென்ட்ரிடிக்’ செல்களின் கவனத்தை ஈர்க்கிறது. இதனை அடுத்து உடலுக்குள் இதுவரை இல்லாத புதிய ஏஜென்டை கவனிக்கும் “ரோந்து செல்கள்”, உடனடியாக நமது உடலுக்கு அலாரம் கொடுக்கிறது.தடுப்பூசி மூலம் உடலில் செலுத்தப்படும் வைரஸ் பற்றிய மரபணு வழிமுறைகளை அறிவதன் மூலம் டென்ட்ரிடிக் செல்கள் இந்த வேலையை செய்கிறன.

சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுவது ஏன்?

ஊசி போட்டு கொண்ட இடத்தில் புண், வீக்கம், சோர்வு, தலைவலி, காய்ச்சல், குளிர், குமட்டல் மற்றும் தசை வலி உள்ளிட்ட பொதுவான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்படுகிறது. தடுப்பூசி மூலம் செலுத்தப்படும் நோயற்ற வைரஸை உண்மையான நோய்க்கிருமி உடலில் நுழைந்து விட்டது என்று, நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு அமைப்பு நினைத்து கொள்கிறது. எனவே உடலில் இருக்கும் வெள்ளை ரத்த அணுக்கள் புதிதாக உள்நுழைந்துள்ள வைரஸை உடைக்க அந்த இடத்திற்கு விரைந்து செல்கின்றன. பின்னர் ஆன்டிபாடிகள் முறிக்கப்ட்ட வைரஸ்கள் உடலில் பரவி விடாமல் தடுக்க அவற்றை தாக்குகின்றன. இதுவே நாம் ஊசி போட்டு கொள்ளும் இடத்தை ஒரு சிறிய போர்க்களத்திற்கு ஒத்ததாக மாற்றி விடுகிறது. தவிர சைட்டோகைன்கள் மற்றும் கெமோக்கின்கள் தடுப்பூசி போட்ட பிறகு சோர்வு மற்றும் உடலில் ஏற்படும் வலிக்கு காரணமாகின்றன.

ஏன் 2 டோஸ்?

இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் கண்டிப்பாக போட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். முதல் டோஸ் தடுப்பூசி டலில் நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த டோஸ் குறுகிய கால ஆன்டிபாடிகளின் பாதுகாப்பை மட்டுமே பெரும்பாலும் தரும். எனவே இரண்டாம் டோஸ் தடுப்பூசியை போட்டு கொள்வது வைரஸுக்கு எதிராக மிகவும் வலுவான மற்றும் நீண்ட கால ரெஸ்பான்ஸை உருவாக்க உடலுக்கு உதவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *