ஜனாதிபதி கோட்டாபயவுக்கு பிரதமர் மஹிந்தவின் ஆலோசனையைப் பெற தேரர் அறிவுரை!
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அபயராம விகாரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
இராணுவத்தினரால் அனைத்து விடயங்களையும் திறம்படச் செயற்படுத்த முடியாது. நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
சிறந்த தரப்பினரை உள்ளடக்கிய ஆலோசனை சபையை ஜனாதிபதி ஸ்தாபிக்க வேண்டும். கோவிட் தாக்கத்தின் காரணமாக சுபிட்சமான கொள்கை திட்டத்தை ஜனாதிபதியால் செயற்படுத்த முடியாமல் போயுள்ளது.
இனி வரும் காலங்களிலாவது சுபிட்சமான கொள்கை திட்டத்தைச் செயற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளைப் பெற வேண்டும். இதேவேளை, அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள்.
சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் இந்நிலை தொடர்ந்தால் ‘சீனி கோவிட் கொத்தணி’ தோற்றம் பெறும் எனத் தெரிவித்துள்ளார்.