நியூசிலாந்து தாக்குதலில் உயிரிழந்தவரின் தாயாரிடம் தீவிர விசாரணை!
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய நிலையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி பலியான காத்தான்குடியை சேர்ந்த நபரின் தாயாரிடம் தீவிர விசாரணைகளை இலங்கை புலனாய்வுத் துறையினர் முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொடக்கம் முப்படையினரும் இணைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காத்தான்குடியில் பிறந்து 2011ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்ற குறித்த இளைஞன் நியூசிலாந்தில் வசித்து வரும் காலத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின்பால் ஈர்க்கப்பட்டார் என்று நியூசிலாந்து அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபரின் சொந்த இடமான காத்தான்குடியில் அவருடைய இல்லத்தில் வைத்து அவரின் தாயாரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த நபரின் தகப்பன் மற்றும் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் தாயார் மட்டும் காத்தான்குடியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.