சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!
நியூசிலாந்தில் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முஹம்மது சம்சுதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் இலங்கை சேர்ந்தவர் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர் என அந்த நாட்டு பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இவர் தொடர்பாகக் குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் அரச புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் இவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டார்.
காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த அதிபரான சம்சுதீன் முஹம்மது இஸ்மாயில் – சரிதா தம்பதிகளுக்கு 1989ஆம் ஆண்டு கடைசி மகனான பிறந்த முஹம்மது சம்சுதீன் ஆதில், ஒரு சகோதரியும் 2 சகோதரன் உட்பட 4 பேரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.
ஆதில் ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக குடும்பத்துடன் 1998ஆம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் தங்கியிருந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கொழும்பு – பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் கல்வி கற்று 2006ஆம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்திற்குச் சென்று குடியேறியுள்ளார்.
இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாயா பாடசாலையில் 2008 ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையாற்றி வந்து நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்து வருவதுடன், அவருடன் கனடாவிற்குச் சென்று குடியேறி வாழந்து வருகின்றார்.
அதேவேளை ஒரு சகோதரன் கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்து வருதாகவும், அடுத்த சகோதரன் சவூதியில் இருப்பதாகவும், கொலன்னாவையில் உள்ள ஆதில் தாயார் சொந்த வீட்டை வாடகைக்குத் தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் தாயார் வசித்து வருகின்றார் எனவும் தெரியவருகிறது.
இந்த நிலையில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையான முஹம்மது சம்சுதீன் ஆதில் நியூசிலாந்தில் குடியேறிய பின்னர் அவர் அங்கு பல்வேறு குற்றச் செயல் காரணமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளதை நியூசிலாந்து பொலிஸார் கண்டுபிடித்து அவரை பின் தொடர்ந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அரச புலனாய்வு பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.