20 இலட்சம் சாரதி அனுமதிப் பத்திர தரவுகள் மாயம்!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் 2009ம் ஆண்டுக்கு முன்னர் வெளியிடப்பட்ட சுமார் 20 லட்சம் சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள், கணினி கட்டமைப்பில் உள்ளடக்கப்படவில்லை என திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
1970ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள், திணைக்களத்தின் கணினி கட்டமைப்பின் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், 2009ம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் வெளியிடப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பிலான தகவல்கள் மாத்திரமே, இந்த கணினி கட்டமைப்பின் உள்ளதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
2009ம் ஆண்டுக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை கிடையாது என்பதனால், அதன் ஆவணங்கள் இல்லாது போயுள்ளதை அடுத்தே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹேர பகுதியிலுள்ள அலுவலகத்தில் 500ற்கும் அதிகமான சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பிலான தரவுகள் அடங்கிய ஆவணப் புத்தகங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை அழிவடைந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
கரையான் மற்றும் எலிகள் இந்த புத்தகங்களை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், ஆவணப் புத்தகங்களிலுள்ள தரவுகளை கணினி மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் மேற்கொண்டுள்ளது.