மன்னிக்கமாட்டோம் சம்பந்தப்பட்டவர்களை தேடி வேட்டையாடுவோம்!

காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தை ஆப்கானியர்கள் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டுவெடித்தது.

இதில் ஆப்கானியர்கள் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலில், அமெரிக்க படையினர் 12 பேரும், கடற்படை மருத்துவர் ஒருவரும் உயிரிழந்துவிட்டதாக பென்டகன் தெரிவித்திருக்கிறது.

விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில், அந்த அமைப்பும் அதனை உறுதி செய்துள்ளது. நிலைமை மோசமடைந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”இந்தத் தாக்குதலை யார் முன்னின்று நடத்தினார்களோ, யார் அமெரிக்கா பாதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினார்களோ அவர்கள் இதனை தெரிந்துகொள்ள வேண்டும். காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்கள் மற்றும் நட்பு நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *