இலங்கையில் ஊரடங்கை தளர்த்த அரசு ஆலோசனை!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் முடிவுறுத்தாமல் மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்குமாறு சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு ஆலோசித்து வருகின்றது.அத்துடன் அத்தியாவசிய சேவைகளை தொடந்து சில கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.

தற்போது அமுலில் உள்ள பொதுமுடக்கத்துடன் கூடிய ஊரடங்கு வெறுமனே 10 நாட்களுக்கு மட்டுமே அமுலில் இருப்பதாலும் ,கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரண வீதம் தொடர்ந்தும் அதிகரிப்பதாலும் குறைந்தபட்சம் மேலும் ஒருவாரகாலத்திற்காவது முடக்கத்தை தொடரவேண்டுமென மருத்துவ நிபுணர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் முடக்க காலப்பகுதியில் மரணங்கள் மற்றும் நோயாளர் எண்ணிக்கையில் குறைவு ஏற்படவில்லையென அரச உயர்மட்டத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதால் அதில் இந்த விடயங்களை ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்க அரச உயர்மட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , நாட்டை தொடர்ந்து முடக்காமல்,ஏற்கனவே அறிவித்தபடி எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்குமாறு அரசின் மூத்த அமைச்சர்கள் பலர் அரச உயர்மட்டத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசு முடிவெடுத்தால் அது மேலும் பாதிப்புகளை தருமென மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *