கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது!

தமிழகத்தில் கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்துவிட்டார் என மனைவி நாடகமாடிய நிலையில் அவர் கொலை செய்யப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த தம்பதி ரஞ்சித் குமார் சிங் – சத்யா (28). இவர்கள் தனது இரண்டு வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 18-ம் திகதி இரவு ரஞ்சித்குமார் சிங் நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக மனைவி சத்யா கூறியுள்ளார்.

இதனையடுத்து அவர்களது வீட்டிற்கு வந்து சடலத்தை பார்த்த ரஞ்சித்குமார் சிங்கின் தந்தை, இறப்பில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்போது சடலத்தை பார்த்து சத்யா கதறி அழுதபடி இருந்தார். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய பொலிசார் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். அப்போதுதான், ரஞ்சித்குமார் சிங் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து மனைவி சத்யாவிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரஞ்சித்குமார் சிங் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால், ஆத்திரமடைந்த சத்யா, பல முறை கண்டித்திருப்பதும், சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவரை கம்பியால் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், நெஞ்சுவலியால் தன் கணவர் இறந்துவிட்டதாக கூறி அனைவரிடமும் நாடகமாடியதையும் பொலிசார் கண்டறிந்தனர். இதனையடுத்து சத்யாவை கைது செய்த பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *