ஆப்கானில் இருந்து விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு நடுவானில் நடந்த சம்பவம்!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விட்டு வெளியேறிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் பிரசவமானது.
ஆப்கனைக் தாலிபான்கள் கைப்பற்றினர். இதனால் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் தினமும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற தங்கள் நாட்டு விமானங்கள் மூலம் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு, ரீச் 828 என்ற எண் கொண்ட அமெரிக்க சி-17 ரக ராணுவ விமானத்தில் வெளியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த விமானம் உடனடியாக ஜெர்மனியில் உள்ள ரம்ஸ்டீன் ராணுவ விமானதளத்தில் தரையிறக்கப்பட்டது. ஓடுபாதையில் நின்ற விமானத்தின் சரக்கு ஏற்றும் பகுதியில் வைத்து விமானத்தில் இருந்த ராணுவ மருத்துவர்கள் குழு அவருக்கு பிரசவம் பார்த்தது.
பிரசவத்திற்குப் பின் அந்தப் பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து விமானத்தில் பிரசவமான சம்பவமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.