நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது!
நாட்டில் நேற்று இரவு 10 மணி முதல் பத்து நாட்களுக்கு அமுலுக்கு வந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கை தவறாக பயன்படுத்த வேண்டாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள், ஆடை, கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயம், சுகாதாரப் பணியாளர்கள், மருந்துகள் மற்றும் ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
இருப்பினும் இந்த துறைகளில் குறைந்தளவு பணியாளர்கள் மாத்திரமே வேலைக்கு அழைக்கப்பட வேண்டும்.
ஏனெனில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல்பொருள் அங்காடிகள், உணவக விநியோகங்கள் மற்றும் வங்கிகள் உட்பட மற்ற அனைத்து சேவைகளும் மூடப்பட்டிருக்கும்.
மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம். இந்த 10 நாட்களில் தடுப்பூசி போடுவதைத் தொடர சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
இராணுவ குழுக்கள் உள்ளிட்ட நடமாடும் குழுக்கள் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தடுப்பூசி மையங்கள் நாடளாவிய ரீதியில் தொடர்ந்து செயல்படும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ் பெற வேண்டியவர்கள் அருகிலுள்ள மையங்களுக்குச் செல்லலாம்.
இவ்வாறானவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.