இலங்கையில் வங்கி அட்டைகளைப் பாவிப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

இலங்கையில் கடன் அட்டை மற்றும் வங்கி அட்டை ஆகியவற்றை உபயோகித்து இணையவழியூடாக பணம் செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்க முடியவில்லை என இலங்கை வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையிலுள்ள வங்கி அட்டைகளை பாவிக்கும் தரப்பினர் இதனால் பெறும் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
இந்த நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதால் தமது நாளாந்த செயற்பாடுகளை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து இணையவழி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இதனால் பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அத்தோடு முகப்புத்தகம் , வர்த்தக மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் உள்ளிட்டவற்றையும் நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் டொலர் இருப்பு மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் , எனவே வெளிநாடுகளுக்கு டொலரை அனுப்புவதை நிறுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வேறு மாற்று வழிகளை பின்பற்றுமாறு இலங்கையிலுள்ள வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன.

எவ்வாறிருப்பினும் இதற்காக மாற்று வழி என்ன என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த சிக்கல் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட பிரதி மத்திய வங்கி ஆளுனர் டீ.எம்.ஜே.வை.பீ.பெர்ணான்டோ,

“கடன் அட்டைகளிளில் கொடுப்பனவு செய்வது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி எவ்வித புதிய சட்டங்களை அல்லது தடைகளை விதிக்கவில்லை. எனினும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வணிக வங்கிகளால் வழங்கப்படும் கடன் அட்டைகளை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது.
தற்போதைய சட்டத்திற்கமைய உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு தேவையான ஒன்றைப் பெற நீங்கள் கடன் அட்டையைப் பயன்படுத்தலாம்.

வர்த்தகம் போன்ற நடவடிக்கைகளுக்காக பொருட்களை வாங்க இதைப் பயன்படுத்த முடியாது. ஆனால் உங்கள் சொந்த உபயோகத்திற்காக ஒன்லைனில் பொருட்களை வாங்குவது மற்றும் ஒரு கல்வி நிறுவனத்திற்கு பணம் செலுத்துவது போன்ற சாதாரணமாக செய்யும் விடயங்களை தொடர்ந்து செய்ய முடியும். அதற்கு எவ்வித தடையும் எங்கள் சட்டங்களில் ஏற்படுத்தவில்லை.

கடன் அட்டையைப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மடிக்கணினியை வாங்கலாம். ஆனால் வணிக நோக்கங்களுக்காக 10 அல்லது 15 மடிக்கணினிகளை வாங்க திட்டமிட்டால், அது பிரச்சனையாக இருக்கலாம்” என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *