நாய்களுக்கு மோசமாக பரவும் பார்வோ வைரஸ்!

கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக நாய்க்குட்டிகளுக்கு ஒருவகை ‘பார்வோ’ வைரஸ் என்ற நோய் மிகத்திவீரமாகப் பரவிவருகிறது.
குறிப்பாக வக்சீன் ஏற்றப்படாத வளர்ப்பு குட்டிநாய்களுக்கே இப் ‘பார்வோ’ வைரைஸ் என்ற நோய் படுவேகமாகப்பரவிவருகிறது.

உரியவேளைக்கு கொண்டுசெல்லப்பட்டு நால்நடைவைத்தியரிடம் முறையான சிகிச்சையைப்பெறும் நாய்க்குட்டிகள் பிழைத்துள்ளன.அவைகளுக்குத் தேவையான ‘சேலைன்’ மற்றும் ‘அன்ரிபயோற்றிக்’ மருந்தும் வழங்கப்படுகின்றன.

அதேவேளை முறையான வைத்தியப்பராமரிப்பு இன்றி சில நாய்கள் இறந்துவருகின்றன.

இதுதொடர்பாக கல்முனையிலுள்ள கால்நடைவைத்தியநிபுணர் டாக்டர் பி.மயூரனிடம் நேரடியாகச்சென்று பல தகவல்களைப்பெறமுடிந்தது.

டாக்டர் மயூரன் விபரிக்கையில்:
பார்வோ ஒரு தொற்று ‘டிஎன்ஏ’ வைரஸ் ஆகும். இது பொதுவாக இளம் மற்றும் தடுப்பூசி போடப்படாத நாய்களில் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது.
இது முதன்மையாக உடலின் வேகமாகப் பிரியும் உயிரணுக்களை பாதிக்கிறது. அதாவது குடல் பாதை மற்றும் எலும்பு மச்சை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது.
நாய்க்குட்டிகள் மற்றும் இளம் பருவ நாய்களில் பர்வோவைரஸ் மிகவும் பொதுவானது என்றாலும் அது வயது வந்த அல்லது மூத்த நாய்களைப் பாதிக்கலாம் குறிப்பாக அவை தடுப்பூசி போடப்படாவிட்டால்.
ஒரு நாய் முழுமையாக தடுப்பூசியாக கருதப்படுவதற்கு ஒரு வயதில் பூஸ்டர் தடுப்பூசி பெற வேண்டும். நாய்கள் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் தடுப்பூசிகளைப் பெற வேண்டும்.

பொதுவாக ‘பார்வோ’ வைரஸ் என்ற ஒருவகை நோய் இக்காலப்பகுதியில் வக்சீன் ஏற்றப்படாத குட்டிநாய்களுக்கு ஏற்படுவது வழமையாகும். உண்மையில் நாய்களுக்கு 42நாட்களில் முதலாவது வக்சீன் ஏற்றப்படவேண்டும்.

வளர்ப்பாளர்கள் நாய்களிடையே வாந்தி வயிற்றுப்போக்கு காய்ச்சல் போன்ற குணங்குறிகளைக்கண்டவுடன் உடனடியாக வைத்தியரிடம் கொண்டுசெல்லவேண்டும்.
இப்படி நோய்க்குணங்குறிகளைக்காட்டும் நாய்க்குட்டிகள் உணவு உட்கொள்ளாமல் வாந்திஎடுத்த வண்ணமிருக்கும். அவைகளுக்கு எந்தக்காரணம்கொண்டும் தண்ணீர் பருகக்கொடுக்கக்கூடாது.
ஜஸ்கட்டி மட்டும் அரைமணிநேரத்திற்கு ஒருதடவை தேன்தடவிகொடுத்தல் நலம். எவ்வாறாயினும் உடனடியாக வைத்தியரை நாடிச்சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது.

இதைத்தடுப்பதற்கான ஒரேவழி வக்சீன் ஏற்றுவதுதான். ஆனால் பார்வோ நோயிருக்கும்போது வக்சீன் ஏற்றமுடியாது. கொரோனா போலத்தான் இதுவும்.
இப்பிராந்தியத்தில் குறிப்பாக காரைதீவில்தான் இந்நோய் ஆரம்பமாகின்றது. தொடர்ந்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவிவருகிறது.
எதுஎப்படியிருப்பினும் உரியவேளையில் வைத்தியசிகிச்சையைப்பெற்றால் நாய்க்குட்டிகளைக்காப்பாற்றலாம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *