கொரோனாவால் அறுவை சிகிச்சையில் பாதிப்பு?
கொரோனா தொற்று என்பது சுகாதாரத்துறைக்கும், மருத்துவத் துறைக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கும் மருத்துவத் துறைக்கு மற்றும் ஒரு பிரச்சனையாக இருப்பது உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை.
உயிர்க் காக்கும் அறுவை சிகிச்சையில் கொரோனா சிக்கல்களை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் இறந்தபிறகு மேற்கொள்ளப்படும் உடல் உறுப்பு தானம், மூளைசாவு ஏற்பட்டவர்களிடம் இருந்து பெறப்படும் உடல் உறுப்பு தானமும் தற்போது மிகவும் குறைந்துவிட்டதாக கூறுகின்றனர்.
இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
விபத்தின் போதும், அறுவை சிகிச்சையின் போதும் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.
ரத்ததானம் செய்பவர்கள் கொரோனா தொற்று காரணமாக நேரடியாக மருத்துவமனைக்கு வருவதற்கு பயப்படுவதால் இந்த பிரச்சனை உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்,
உறுப்பு தானம் செய்பவர்களும் மருத்துவமனைக்குச் செல்ல பயப்படுகின்றனர். இதனால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் இறப்பதற்கும், உடல் நிலை மோசமாகும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
உலக அளவில் பெரும்பாலான மருத்துவமனைகளில் கல்லீரல், சிறுநீரக மாற்று சிகிச்சை, விபத்து போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இதுபோன்ற பிரச்சனையால் கடுமையான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது மருத்துவமனைகள்.
நமது உடலில் இயங்கும் உறுப்பு செயலிழந்து போனபிறகு இறுதிக்கட்டமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை உலகளவில் 4 முதல் 6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் உறுப்பு தானம் விகிதம் குறைவு எனவும் கூறுகிறது இந்த அமைப்பு.
மற்ற நாடுகளின் விகிதத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியாவின் உறுப்பு தானம் மிகக் குறைவு. இங்கு இருக்கும் ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 0.34 என்ற அளவிலேயே உறுப்பு தானம் செய்யப்படுவதாக தகவல்.
சுமார் 5 லட்சம் மக்களுக்கு உறுப்பு தானம் தேவைப்படுவதாக கூறுகின்றனர். சூழ்நிலை இவ்வாறு இருக்கும்போது உறுப்பு தானத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதால் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளில் நாள் ஒன்றுக்கு 17 பேர் உயிரிழப்பதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.
மேலும் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கும் அபாயமும் இருப்பதாக கூறியுள்ளது.
இங்கு இருக்கும் மருத்துவமனைகளில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத சூழ்நிலையில் இது போன்ற பெருந்தொற்று பாதிப்பு மருத்துவத்துறைக்கு சவாலாக இருக்கிறது.
உடல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிகள் தீவிர கண்காணிப்பில் இருப்பது அவசியம். ஆனால் கொரோனா காலத்தில் இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களை கவனிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்தத் தொற்றின் காரணமாக உறுப்பு தானம் செய்பவர்களும் பெறுவோருக்கும் புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
இருதரப்பின் பாதுகாப்புக் கருதி அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். இருதரப்பினரும் தடுப்பூசி போட்டிருப்பது அவசியமாகும் என்கின்றனர் மருத்துவ நிவுணர்கள்.