ஆப்கானை விட்டு தப்ப முயன்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான்!
ஆப்கானிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள உஸ்பெகிஸ்தானின் Surxondaryo பகுதியில் ஆப்கான் இராணுவத்திற்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருதவதாக உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான விமானத்தில், ஆப்கான் இராணுவ அதிகாரிகள் பயணித்ததாகவும், அவர்கள் நாட்டை விட்டு தப்ப முயன்றதாக தகவல்கள் வெளியானது.
எனினும், அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தார்கள் மற்றும் விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆப்கான் இராணுவ விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
வான்வெளியில் எல்லை மீறி நுழைந்த ஆப்கான் இராணுவ விமானத்தை, உஸ்பெகிஸ்தான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.