திருமண நிகழ்வில் கலந்து கொள்ள 50 பேருக்கு மாத்திரமே அனுமதி!
இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருமண நிகழ்வுகளின் போது 50 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து முன்னதாக வௌியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ரத்தாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் குறித்த எண்ணிக்கை திருமண மண்டபங்களின் ஆசன எண்ணிக்கை 500 க்கும் அதிகமாக காணப்பட்டால் 150 ஆகவும், 500 க்கும் குறைவாக காணப்பட்டால் 100 ஆகவும் காணப்பட்டது.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கொவிட் கட்டுப்பாட்டு ஆலோசனை வழிகாட்டுதல்கள் இன்று சுகாதார அமைச்சினால் வௌியிடப்படவுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல், மேல் மாகாணத்தில் 60 வயதுக்கும் மேற்பட்ட பல்வேறு நோய் நிலைமைகளில் பீடிக்கப்பட்டுள்ள நபர்கள் கம்பஹா, களுத்துறை, வைத்தியசாலைகளிலும் மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையிலும் தடுப்பூசியை ஏற்றுக் கொள்ள முடியும் என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.