இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்களை தேடும் பொலிஸார்!
கொவிட் தடுப்பூசியின் ஒரு டோஸை கூட இதுவரையில் செலுத்திக் கொள்ளாத கொழும்பு நகரத்தில் உள்ள 30 வயதிற்கு மேற்பட்டவர்களை தேடி விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்று (07) முதல் சுகததாஸ விளையாட்டரங்கிற்கு குறித்த நபர்களை அழைத்து வந்து தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய, நடைமுறைப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவினர் ஒன்றிணைந்து, கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் நபர்களை சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிற்கு அழைத்துசென்று அவர்களுக்கு முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர அதிகார எல்லைக்குள் வசிக்கும், கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தாமாக சென்று சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கிலுள்ள நடமாடும் தடுப்பூசி மையத்தில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொழும்பில் 30 வயதுக்கு மேற்பட்டோர் இதுவரை கொரோனா தடுப்பூசியை போடவில்லை என்றால், தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.