மாறுபாடான புதிய வைரஸால் தடுப்பூசி பயனில்லாமல் போகலாம்!
பிரித்தானியாவில் தற்போது பரவி வரும் புதிய மாறுபாடானது இதுவரையான தடுப்பூசிகளால் தடுக்க முடியாமல் போகலாம் என்ற அச்சம் நிபுணர்களில் எழுந்துள்ளது.
தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடானது பிரித்தானியாவில் ஆகஸ்டு 4ம் திகதிவரை 37 பேர்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கண்டறியப்பட்டுள்ள மாறுபாடுக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனம் பெயர் வழங்கவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த புதிய மாறுபாடானது ஐரோப்பா முழுவதும் பரவி வருகிறது மற்றும் ஆறு இங்கிலாந்து பகுதிகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன, பெரும்பாலான பாதிப்புகள் லண்டனில் பதிவாகியுள்ளன.
இந்த நிலையிலேயே, இதுவரையான தடுப்பூசிகள் அனைத்தும் இந்த புதிய மாறுபாடில் இருந்து நம்மை பாதுகாக்காது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இன்னமும் ஆய்வில் உள்ளபடியால், தற்போதைய சூழலில் உறுதியாக கூற முடியாது என்றே தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது நமது உற்றார் உறவினர்களை பாதுகாக்க உதவும் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தடுப்பூசியால் முழுமையாக அனைத்து பாதிப்புகளையும் ஒழிக்க முடியாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர்.
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் டெல்டா வகையை விட இந்த புதிய கொரோனா மாறுபாடானது அதிக பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.