சகலதுறை ஆட்டக்காரர் பிராவோ ஓய்வு பெறுகிறார்!
மேற்கத்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரர் டுவைன் பிராவோ டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.மேற்கிந்திய வீரர் டுவைன் பிராவோ கடந்த 2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினார். இவரது சிறப்பான விளையாட்டுக் காரணமாக உலகின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
பிராவோ மேற்கத்திய தீவுகள் அணிக்காக 85 டி20 போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும், 1,229 ரன்கள் குவித்துள்ளார். 164 ஒருநாள் போட்டிகளில் 2,968 ரன்களும் 199 விக்கெட்டுகளையும், 40 டெஸ்ட் போட்டிகளில் 2,200 ரன்களும் 86 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
இந்நிலையில் தனது 86வது டி20 போட்டியில் விளையாடிய பின்னர் நேற்று திடீரென ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
மேற்கத்திய தீவுகள் அணி டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப்பை இருமுறை வென்ற போதும் அணியில் இருந்த பிராவோ இந்த முறை நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திடீர் ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கத்திய தீவுகள் கேப்டன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ எங்கள் அணியின் மிகப்பெரிய ஜாம்வான்களில் ஒருவருக்கு வாழ்த்துக் கூற இந்த வாய்ப்பை பயன்படுத்துகிறேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 பிரிவுகளிலும் பிராவோ விளையாடியுள்ளார், இதில் டெஸ்ட், ஒருநாள் போட்டியில் மட்டும் நீண்டகாலத்துக்குமுன்பே ஓய்வு பெற்றுவிட்டார்.
ஆனால், கரிபீய மண்ணில் இன்று நடக்கும் கடைசிப் போட்டிதான் பிராவோவின் சர்வதேச கடைசி டி20 போட்டியாக இருக்கப் போகிறது. இதை எதிர்நோக்கி இருக்கிறோம்.ஆனால், டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின்புதான் டி20 போட்டியில் இருந்து பிராவோ ஓய்வு பெறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.