தாயும் பிள்ளைகளும் உறங்கிய மெத்தையின் கீழிருந்து 30 பாம்பு குட்டிகள் மீட்பு!

தாயும் பிள்ளைகளும் உறங்கிய கட்டில் மெத்தையின் கீழ் 30 நல்ல பாம்பு குட்டிகள் மீட்கப்பட்ட சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குருணாகல் மாவட்டம் மாவத்தகம தெல்கொல்வத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டில் இருப்பவர்களின் தகவலை அடுத்து அங்கு சென்ற சூழலியலாளரும், குருணாகல் பிரதேச சபையின் பணியாளருமான கெலும் சோமரட்ன என்பவர் இந்த பாம்புக்குட்டிகளை இன்று மீட்டுள்ளார்.

இந்த வீட்டின் உரிமையாளரது மனைவியும் பிள்ளைகளும் கட்டில் மெத்தையில் பாம்புக் குட்டிகள் இருப்பது தெரியாது, சில நாட்கள் நித்திரை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன் தினம் இரண்டு பாம்புக் குட்டிகளை கண்ட வீட்டின் உரிமையாளர் அவற்றை அடித்துக் கொன்றுள்ளார்.

பின்னர் நேற்றும் மெத்தையில் ஒர் பாம்புக் குட்டி நித்திரை கொண்டவர்களின் மேல் ஏறிச் சென்றதனால் சந்தேகத்தின் பேரில் கட்டில் மெத்தையை எடுத்து பார்த்த போது பாம்புக் குட்டிகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *