தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்துமாறு பணிப்பு!

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொவிட் நோயாளர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுக்கேற்ப, அவர்களில் சுமார் 95 சதவீதமானவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது. தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிருந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்து விசாரணை செய்வதும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களை கணக்கெடுக்குமாறு பணிப்பு-

இது பற்றி பிரதேச செயலக மட்டத்தில் துரித கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் குறித்த அறிக்கை ஒன்றை ஒரு சில தினங்களுக்குள் பெறுமாறு ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்து கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. நோய் பரவுவதை தடுக்கும் வகையில் செயற்படுவதும் தடுப்பூசிகளை விரைவாகப் பெற்றுக் கொள்வதும் மக்களின் கடமையாகுமென, ஜனாதிபதி குறிப்பிட்டார். எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களுக்கு வருகை தரும் மக்கள், தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள் என்பதனை உறுதிப்படுத்தும் அட்டையைத் தம்வசம் வைத்திருப்பதை கட்டாயமாக்குவது குறித்தும் கொவிட் குழு கவனம் செலுத்தியுள்ளது.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, ரமேஷ் பத்திரண, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, சிசிர ஜயக்கொடி, சன்ன ஜயசுமண, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஆகியோரும் முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும், இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *