பறவைகள் இறந்து கிடந்தால் ஜாக்கிரதை!
கொரோனா பெருந்தொற்றில் இருந்து இருந்து மீளாத நிலையில் அடுத்து ஒரு பேரதிர்ச்சியாக பறவை காய்ச்சல் பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்5 என்8 என்ற வைரஸ் பறவைகளிடம் இருந்து மனிதர்களை தாக்குகிறது. இதனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமாகி பின்னர் மூச்சுத்திணறல் காரணமாக அவதியுற்றுள்ளார். சிகிச்சை அளித்தும் குணமடையாத நிலையில், அந்த சிறுவன் கடந்த 2ஆம் தேதி அன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுவனை சோதனை செய்ததில், எச்5 என்8 வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் அந்து சிறுவன் உயிரிழந்துவிட்டார். சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, பறவைகள் எங்கேனும் இறந்து கிடந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தேசிய நோய் கட்டுப்பாடு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த வைரஸ் கண், மூக்கு, வாய், சுவாசம் வழியாக பரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், சளி, தொண்டை வலி, உடல் வலி, தலைவலி, கண்கள் சிவப்பாகுதல், மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற அறிவுகுறிகள் ஏற்படும் எனவும் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் அறிவுரை வழங்கியுள்ளது