கொட்டித் தீர்க்கும் மழையால் மிதக்கும் கார்கள்!
சீனாவில் ஒரே நாளில் அதிகனமழை பெய்ததால் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அத்துடன் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ளத்தில் மிதந்தன.
கடந்த ஒரு வாரமாக சீனாவின் பல்வேறு மாகாணங்களில் அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சீனாவின் முக்கியமான ஹெனான் என்ற மாகாணத்தில் அதி தீவிர கனமழை பெய்து வருகிறது.
அங்குள்ள செங்சாவ் பகுதியில் மாலை 4 மணி முதல் 5 மணி வரையில் மட்டும் 20 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. பொதுவாக அங்கு ஆண்டுக்கு சராசரியாக 60 சென்டி மீட்டர் மட்டுமே மழை பெய்யும்.
இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதந்து, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த ஓடுகின்றன. அத்துடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
அத்துடன் சுரங்க ரயில் பாதைக்குள் நீர்புகுந்த நிலையில், இடுப்பளவு நீரில் மக்கள் தத்தளித்தனர். இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலரை காணவில்லை.
இந்த மழையால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.