இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை படுதோல்வி!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

தசுன் சானக 39 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், சரித் அசலங்க 38 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தீபக் சஹார், குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 263 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 36.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் அணித்தலைவர் சிகர் தவான் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

தனது கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய இஷான் கிசான் தனது முதலாவது அரைச்சதத்தினை பதிவு செய்தார்.

அவர் 42 பந்துகளில் 59 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பிரித்திவ் ஷா 43 ஓட்டங்களையும், மனிஷ் பான்டே 26 ஓட்டங்களையும் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக பிரித்திவ் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்படி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *