ரிஷாதின் வீட்டில் பணிபுரிந்து சிறுமியின் மரணத்திற்கான காரணம் வெளியானது!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில், வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஜூட் குமார் ஹிஷாலினி எனும் 16 வயது சிறுமி , உடலில் தீ பரவி பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 3ம் திகதி உடலில் தீ பரவியமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஹிஷாலினி அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி கடந்த 15ம் திகதி உயிரிழந்தார். இதனையடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்ற, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரிய, உயிரிழந்த ஹிஷாலினி தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி ஹிஷாலினியின் சடலம் மீதான பரிசோதனைகள் கொழும்பு சட்ட மருத்துவ நச்சு ஆய்வியல் நிலையம் ஊடாக முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் இந்த பிரேத பரிசோதனைகளை முன்னெடுத்த நிலையில், வெளிப்புற தீக்காயங்கள் , கிருமி தொற்றினால் ஏற்பட்ட அதிர்ச்சி மரணத்துக்கான காரணமாக அதில் கண்டறியப்பட்டுள்ளது.

விஷேடமாக குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையின் படி, விஷேட சட்ட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக், 3 சிறப்பு குறிப்புக்களை இட்டுள்ளதுடன், அதில் ஹிஷாலினியின் உடலில் 72 வீதமான பகுதி தீயினால் முற்றாக எரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஹிஷாலினி எந்தவிதமான சித்திரவதைகள், கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை என குறிப்பிட்டுள்ள சட்ட வைத்திய அதிகாரி, நாற்பட்ட பாலியல் ஊடுருவல் தொடர்பிலான சான்றுகள் உள்ளதாக சுட்டிக்கட்டியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *