தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31 வரை நீடிப்பு!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ம் திகதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முறை தொழிற்பயிற்சி, தட்டச்சு-சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தநிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 31ம் தேதி வரையில் நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.