நன்றி மறந்த மொட்டு கட்சி தயாசிறி பதிலடி!
” அரசியல் களத்தில் எவராலும் என்னை மௌனிக்கச்செய்ய முடியாது.” – என்று தெரிவித்து, மொட்டு கட்சி உறுப்பினர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.
மொட்டு கட்சி உறுப்பினர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும்வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியில் சுதந்திரக்கட்சியின் பங்களிப்பும் உள்ளது. இதனை புரிந்துகொள்ளாமல், நன்றி மறந்து விமர்சிக்கின்றனர். சுதந்திரக்கட்சியின் ஆதரவு இல்லாதிருந்திருந்தால் கண்டி மாவட்டத்தில்கூட 50 ஆயிரம் வாக்குகளால் தோல்வியை சந்திக்க நேரிட்டிருக்கும் என்பதை திலும் அமுனுகம போன்றவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியும் செய்கின்றது. அரசியலும் செய்கின்றது. ஆனால் சுதந்திரக்கட்சிக்கு இவ்விரண்டுமே இல்லாமல்போயுள்ளது. எனவே, என்னை எவரும் மௌனிக்க வைக்கமுடியாது. நான்தான் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளேன்.” – என்றார்.