மருதாணியில் மறைந்திருக்கும் மகத்துவம்!

மகாலட்சுமி வாசம் செய்யும் மருதாணியை சுக்கிரனின் அம்சம் என்கிறது ஜோதிடம். மருதாணி உடம்பின் சூட்டை தனித்து குளுமையை ஏற்படுத்தும். இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.

வெள்ளிக்கிழமைகளில் மருதாணி இலையை சுமங்கலிப் பெண்கள் தங்களது கைகளில் வைத்துக் கொண்டால், மாங்கல்ய பலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

யார் மேல் அன்பு அதிகம்?

மருதாணியை ஒருவர் கையில் வைக்கும்போது, மருதாணி வைக்கப்பட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.

ஆயுர்வேதம் சொல்வது என்ன?

மருதாணி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. சிலருக்கு ஆரஞ்சு நிறமாக பிடிக்கும். சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். மருதாணி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டால் அது பித்த உடம்பு என்கிறது. இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம்.

சுக்கிரனின் அம்சமான மருதாணி இலை சிறந்த கிருமி நாசினியாகும். கண்ணுக்கு புலப்படாத கிருமிகளை அழிக்கவல்லது. மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.

இராமாயணத்தில்..

ஒருநாள் ராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ராமரிடம், ‘இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்” என்று கூறி மருதாணி செடியிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டாள். உங்களை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சி என்றது மருதாணி செடி.

அதற்கு சீதை, ‘உன் குணத்திற்காக நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்ற வரத்தை தந்தார் சீதா தேவி. அதனால்தான் இன்றுவரை திருமணத்திற்கு முந்தைய நாளில் மருதாணி வைத்து விழா நடத்துகிறார்கள். ஏனெனில், மகாலட்சுமியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *