நாடாளுமன்றத் தொடர் நாளை ஆரம்பம் – முக்கிய சில விடயங்கள் தொடர்பில் விவாதம்!

இவ்வார பாராளுமன்ற அமர்வை நாளை (06) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (09) வரை நடாத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தலைமையில் இன்று (05) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
அதற்கமைய, பாராளுமன்றம் நாளை (06) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு மு.ப. 11.00 மணிமுதல் பி.ப. 4.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்ட மூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிபரிப்பது தொடர்பான பிரேரணையும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனை அடுத்து பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

நாளை மறுதினம் (07) மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான 2 ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்படவுள்ளது.

அதேவேளை, அன்றைய தினம் பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜூலை 08 ஆம் திகதி மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 4.30 மணி வரை தேருநர்களை பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பது பல்கலைக்கழக சட்டமூலம், குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அதனை அடுத்து பி.ப. 4.50 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது .

அதேவேளை, ஜூலை 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாராளுமன்ற அமர்வு இடம்பெறும் நான்கு தினங்களிலும் மு.ப. 10.00 மணி முதல் மு.ப. 11.00 மணி வரையான நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளிக்கிழமை (09) தவிர்ந்த ஏனைய மூன்று நாட்களிலும் பி.ப. 4.30 மணி முதல் பி.ப. 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *