pulse of the Earth: பூமி எப்போது அழியும் கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

ஒட்டு மொத்த இனத்தையே சிதைந்து போக செய்யும் மிகப்பெரிய அளவிலான அழிவுகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் போன்ற முக்கிய புவியியல் மாற்ற நிகழ்வுகள், ஒவ்வொரு 27.5 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் மீண்டும் நடப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

புதிய ஆய்வின் படி இந்த நிகழ்வுகளை “பூமியின் பல்ஸ்” (A pulse of the Earth) என்று அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வின் முதன்மை ஆசிரியரான புவியியலாளர் மைக்கேல் ராம்பினோ (geologist Michael Rampino) கூறியதாவது, புவியியல் நிகழ்வுகளில் காலப்போக்கில் எந்த வடிவமும் இல்லை. ஆனால் எங்கள் ஆய்வு ஒரு பொதுவான சுழற்சிக்கான புள்ளிவிவர ஆதாரங்களை அளிக்கிறது. இந்த ஆதாரங்களின் படி, அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய புவியியல் நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை மற்றும் சீரற்றதல்ல என்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறார். நியூயார்க் யுனிவர்சிட்டியில் பேராசிரியராக பணிபுரிகிறார் மைக்கேல் ராம்பினோ. இந்த ஆய்வு கடந்த சில நாட்களுக்கு முன் Geoscience Frontiers-ல் வெளியிடப்பட்டது.

கடந்த 260 மில்லியன் ஆண்டுகளின் தரவுகளை சேகரித்து, பேட்டர்ன்களுக்கான 89 முக்கிய புவியியல் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இந்த 89 முக்கிய புவியியல் நிகழ்வுகளில் நிலம் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களின் பெருமளவிலான அழிவுகள், மிகப்பெரிய எரிமலை வெடிப்புகள், கடல்களில் ஆக்ஸிஜன் குறைந்தது, கடல் மட்டத்தில் நிகழ்ந்த ஏற்ற இறக்கங்கள் மற்றும் பூமியின் டெக்டோனிக் பிளேட்ஸ்களின் மிகப்பெரிய நகர்வு மற்றும் மறுசீரமைவு உள்ளிட்டவை அடங்கும்.

இந்த ஆய்வின் போது ஆராய்ச்சியாளர்கள் டேட்டாவை திட்டமிட்டு புள்ளிவிவர பகுப்பாய்வு நடத்திய போது, இந்த முக்கிய நிகழ்வுகள் 10 வெவ்வேறு புள்ளிகளில் கிளஸ்டர்களை உருவாக்கின. இதன் மூலம் ஒவ்வொரு 27.5 மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுமாதிரியான மிகப்பெரிய புவியியல் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை ஆய்வு முடிவு காட்டியது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி கடைசியாக மிகப்பெரிய புவியியல் மாற்றங்கள் சுமார் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்துள்ளதாகவும், அடுத்த மிகப்பெரிய அழிவு அல்லது புவியியல் மாற்றங்களை நமது கிரகம் சந்திக்க இன்னும் 20.5 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்தினர்.

முக்கிய புவியியல் நிகழ்வுகளின் பேட்டர்ன்களை கண்டறிவதில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக புவியியலாளர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது போன்ற நிகழ்வுகளின் தரவுகள் மிக துல்லியமாக இல்லாத காரணத்தால் அதை செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது ரேடியோ-ஐசோடோப்பு டேட்டிங் நுட்பங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், புவியியல் டைம் ஸ்கேலில் (geologic time scale) பெரிய மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் தான் பேராசிரியர் ராம்பினோ மற்றும் அவரது குழுவினரால் முக்கிய புவியியல் நிகழ்வுகளின் அப்டேட்டட் ரெக்கார்டுகளை தொகுக்க முடிந்துள்ளது.

இருப்பினும் குறிப்பிட்ட மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் புவியியல் மாற்றங்களுக்கான காரணம் புவியியலாளர்களுக்கு தெளிவாக தெரியவில்லை. எனினும் டெக்டோனிக் பிளேட்ஸ்களின் இயக்கம் மற்றும் காலநிலையை பாதிக்கும் பூமிக்குள்ளேயே நடக்கும் செயல்பாட்டு சுழற்சிகளுடன் இந்த பூமியின் பல்ஸ்கள் (pulse of the Earth) இணைக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *