பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிந்தால் ஆண்கள் சபலமடைவார்கள் இம்ரான் கான் பேச்சால் சர்ச்சை!
பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிந்தால் ஆண்கள் நிச்சயம் சபலமடைவார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஹெச்.பி.ஓ. சேனலில் அளித்த பேட்டியில், “நான் பர்தா என்ற கருத்தாக்கத்தைப் பற்றி பேசினேன். உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தவிர்க்க வேண்டும். இங்கு டிஸ்கோ கிளப்கள் கிடையாது, இரவு கேளிக்கை விடுதிகள் கிடையாது. இது முற்றிலும் வித்தியாசமான ஒரு சமூகம். வித்தியாசமான வாழ்க்கை முறை.
எனவே ஒரு அளவுக்கு மேல் ஆண்களின் உணர்ச்சிகளை பெண்கள் தூண்டினால் இளைய ஆண் சமுதாயம் எங்கு போய் ஆசையைத் தீர்த்துக் கொள்ளும்? எனவே அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களைத் தூண்டினால் அது சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பெண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் ஆண்கள் நிச்சயம் சபலமடைவார்கள், ரோபோக்கள் மட்டுமே சபலமடையாது, எனவே அரைகுறை ஆடைகள் அணிந்தால் ஆண்கள் சபலமடைவது என்பது இயற்கையானது.
மீண்டும் எந்த மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயமாகும் இது. அரைகுறை ஆடைகள், ஆபாசங்களை பார்த்திராத சமூகமாக இருந்தால் இவை நிச்சயம் தாக்கம் ஏற்படுத்தவே செய்யும்” என்றார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்புக்கு பெண்கள் ஆடைவணிவது குறித்து பேசி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.இம்ரான் கானின் கருத்துக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர்களும் பத்திரிகையாளர்களும் கடும் விமர்சனத்தை வைத்துள்ளனர்.