கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்!
கொரோனா நோய் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோர் நுரையீரலை பாதுகாக்க புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா். கொரோனா தொற்று பாதித்தோரில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு வரை கொண்டு செல்கிறது. கொரோனா தொற்றால் நுரையீரலில் ஏற்படும் பாதிப்பால் அதன் மென்மை தன்மையை இழந்து கடினமாகிறது. இதனால் நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: அறிகுறிகளுடன் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அறிகுறிகளின்றி நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். நோய் தொற்றின் தீவிரத்திற்கேற்ப நுரையீரலில் பாதிப்பு காணப்படும்.
இந்நிலையில், நுரையீரலை பாதுகாக்க கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைந்தபட்சம் ஓராண்டுக்கு கைவிட வேண்டும். புகை பழக்கத்தால் நுரையீரல் மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால் மிகவும் ஆபத்தான நிலைக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது என்றனா்….