திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவே ஹெரோயின் கடத்தினேன்!
”மகளின் திருமணத்தை ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் பிரமாண்டமாக நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காகவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டேன்.” – என்று பொலிஸாரால் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சீருடையில் சுமார் 50 கோடி ரூபா பெறுமதியான 52 கிலோ ஹெரோயின் கடத்திய களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் உப பொலிஸ் பரிசோதகரே, பொலிஸ் விசாரணையின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
கைதாவதற்கு முன்னர்கூட இவர் கொழுந்துக்கு 75 கிலோ ஹெரோயின் கடத்தியுள்ளார் எனவும், அதற்காக 20 இலட்சம் ரூபா பெற்றுள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹெரோயின் கடத்திய உப பொலிஸ் அதிகாரி மட்டுமல்ல கடத்தப்பட்ட ஹெரோயினை பெறுவதற்காக காத்திருந்த இருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். போதைப்பொருளுடன் பயணித்த இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த பொலிஸ் அதிகாரியும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.