டெங்கு மற்றும் கொரோனா நோய்கள் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தக்கூடியவை!

டெங்கு மற்றும் கொரோனா நோய்கள் ஒரே மாதிரியான நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தக் கூடியவை என தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதனால் ,நோய் அறிகுறிகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருக்குமாறும், தேவையற்ற மருந்துகளை பயன்படுத்தாமல் நோய் அறிகுறிகள் தென்படும் முதல் சந்தர்ப்பத்திலேயே வைத்தியர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வருடத்தை விட இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், சீரற்ற வானிலையால் எதிர்வரும் சில வாரங்களில் நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் டெங்கு நோய்க்கான சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் வீடு மற்றும் சுற்றுப்புற சூழலை சுத்தம் செய்வதும் மக்களின் பொறுப்பு என வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் தற்போது கொரோனா ஒழிப்பு நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் முழுமையாக கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் , இந்த பொறுப்புகளை மக்கள் நிறைவேற்ற வேண்டும் எனவும், தமது வீட்டு சுற்றுச்சூழல் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *